9-ம் எண்ணில் பிறந்தவர்களா நீங்கள்?

9-ம் எண்ணில் பிறந்தவர்களா நீங்கள்?

9, 18, 27 தேதியில் பிறந்தவர்களது எண்தான் கடைசியில் இருக்கிறதே ஒழிய, இவர்கள் எல்லாவற்றிலும் முதலிடத்தில்தான்.

எதிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற கொள்கை கொண்டிருப்பர். அறிவாற்றல் மிக்கவர்கள். இவர்களின் பயமுறுத்தும் பேச்சையும், படாடோபமான செயல்களையும், வேகமான முடிவுகளையும், எதிலும் புகுந்து கலக்கும் ஆற்றலையும் பார்த்தால் இவர்களுக்கு மட்டும் எப்படி இந்த வல்லமை வந்தது என நினைக்கத் தோன்றும்.

இதற்கு ஒரு காரணம் உண்டு. பூமிக்கு அருகில் இருக்கும் கிரகம் செவ்வாய். இதற்கு முழுமையான ஆற்றலை அனலாகத் தருபவர் சூரியன். 9ஆம் எண்ணுக்கு சூரியனும், செவ்வாயும் அதிபதி. இதனால் அறிவில் சூரியன் போன்று பிரகாசிப்பர்.

கடகடவென சிரித்துப் பேசி, வேலைகளை எளிதில் முடித்துக் கொள்வர். சில நேரங்களில் மிகக் கடுமையாக இருந்தும் வேலையை முடிப்பர். முதன்மைப் பதவிகளை மட்டுமே விரும்புவர். இவர்களை பத்தோடு பதினொன்றாக வேலைக்கு சேர்த்துவிட்டால், அரைமணி நேரத்திலேயே சேர்த்து விட்டவர் வீடு திரும்பும் முன் இவர்கள் வீடு திரும்பிவிடுவர். கூலி வேலைக்குப் போனால் கூட அங்கே சங்கம் அமைத்துத் தலைவரான பிறகே தன் வேலையைப் பார்ப்பார். இவர்களையும் அடக்க ஒரு எண்ணினர் இருக்கிறார்கள். அவர்கள்தான் மூன்றாம் எண்காரர்கள். ஒன்பதாம் எண்காரர்களுக்கு மூன்றாம் எண்ணில் பிறந்த மனைவி அமைந்தால், மனைவி சொல்லே மந்திரம் என்பதற்கு ஒப்ப பெண்டாட்டிதாசர்களாக இருப்பர். ஆயினும் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றமே அடைவர்.

அதீத சுறுசுறுப்பும், வேகமும், துணிவும் கொண்ட இவர்களை உணவு வகைகளைக் காட்டியே மயக்கிவிடலாம். அவ்வளவு ருசித்து உண்பர். மாமிச உணவு மிகவும் பிடிக்கும். ஆனால் உணவுக் கட்டுப்பாடு அவசியம் தேவை. இல்லையேல் உஷ்ண நோயினால் பாதிப்பு வரலாம்.

நீதி, நேர்மை, ஒழுங்கு, கட்டுப்பாட்டை விரும்பும் இவர்கள் மற்றவர்களும் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று அடக்குமுறை காட்டுவர். இவ்வாறு நடக்கவில்லையானால் குடும்பத்தினாரானாலும் குதறிவிடுவர்.

மிடுக்கான தோற்றம் கொண்ட இவர்கள் வாகனங்களை வேகமாகச் செலுத்துவதில் மிகுந்த விருப்பம் கொண்டவர்கள். சாதாரணமாக வாகனத்தைச் செலுத்துவதே பந்தயம் மாதிரித்தான் இருக்கும். வாகனம் செலுத்தும்போது கவனம் தேவை. திறமையையும், உழைப்பையும் மூலதனமாகக் கொண்ட இவர்கள், சோம்பேறிகளைக் கண்டால் வெறுத்து ஒதுக்குவார்கள். காவல்துறையிலும், ராணுவத்திலும், உணவுக் கூடங்களிலும், பாதுகாப்புச் சேவைகளிலும் இவ்வெண்ணில் பிறந்தவர்கள் அதிகமாக ஈடுபடுவர்.

அடுத்தவர் மெச்சும்படி வாழும் இவர்கள் அரசியலில் ஈடுபட்டாலும் ஜொலிப்பர். அடுத்தவர்கள், இவர்களிடம் ஆலாசனை கேட்குமளவிற்குப் பல இடங்களில் பஞ்சாயத்தாராகவும்;, தைரியபுருஷர்களாகவும் இருப்பார்கள்.

எந்தப் பதவியிலிருந்தாலும் முதன்மைப் பதவியில் இருப்பர். பல நாடுகள், இடங்களுக்கு செல்வதில் பிரியப்படுவர். தன் சுதந்திரத்திற்குப் பங்கம் ஏற்பட்டால் ஒரு பெரும் பிரளயத்தையே நடத்திவிடுவர். ரத்த ஓட்டத்தில் ஏற்ற இறக்கமுpள்ள இவர்களுக்கு காய்ச்சல் உள்ளதுபோல் உடம்பு எப்பொழுதும் உஷ்ணமாக இருக்கும். அசாத்திய மூளைத்திறன் கொண்ட இவர்கள் கோபத்தை விட்டுவிட்டால் ஊரையே தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம்.